Tuesday 10 September 2013

ஒருநபர் கம்பெனி: சிறு தொழிலுக்கு வரப்பிரசாதம் !

இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் இருந்தால்தான் கம்பெனியாக பதிவு செய்ய முடியும் என்கிற நிலை மாறி, ஒரே ஒருவர் நடத்தும் நிறுவனத்தைகூட இனி கம்பெனியாக பதிவு செய்யலாம் என்கிற நடைமுறையைக் கொண்டு வந்திருக்கிறது சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய கம்பெனிகள் சட்டம். இந்த மாற்றத்தைத் தொழில்முனைவோர்கள் பலமாக வரவேற்றுள்ளனர். இந்தப் புதிய சட்ட விதிமுறையால் தொழில் முனைவோர்களுக்கு என்ன லாபம் என கோவையைச் சேர்ந்த ஆடிட்டர் ஜி.கார்த்திகேயனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர். 

''உலக அளவில் பல நாடுகளில் ஒருநபர் கம்பெனிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் தற்போதுதான் இதற்கு வழி பிறந்துள்ளது. குறைந்தபட்சம் ஒரு லட்சம் முதலீட்டில் தொடங்கும் தொழில்களைகூட கம்பெனிகளாக இனி பதிவு செய்துகொள்ள முடியும். இது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சிறந்த வாய்ப்பாக இருக்கும். இதை சிறு தொழிலுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாக எடுத்துக்கொள்ளலாம்'' என்றவர், இந்த சட்டத்தின் சாதகமான விஷயங்களையும் குறிப்பிட்டார்.  

கம்பெனி தகுதி!
கம்பெனிகள் பதிவாளரிடத்தில் பதிவு செய்வதன் மூலம் கம்பெனி என்கிற அடையாளம் கிடைக்கிறது. உரிமையாளர் என்கிற அடையாளம் தருகிற நன்மதிப்பைவிட கம்பெனி இயக்குநர் என்கிற நன்மதிப்பு கிடைக்கிறது. இதுதவிர, கம்பெனி என்கிற அடையாளம் கடன் வாங்கும் மதிப்பையும், சமூக அங்கீகாரத்தையும் தரும்.

பொறுப்புகள் வரையறை!
தனிநபரை உரிமையாளராகக்கொண்டு இயங்கும்போது பொறுப்புகளுக்கு வரையறை கிடையாது. தொழிலில் நஷ்டம் ஏற்படுகிறது எனில், அதாவது தொழிலுக்கு என்று வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்த முடியாதபோது அந்தப் பொறுப்புகளுக்கு ஈடாக உங்களது சொந்த சொத்துக்களையும் இழக்கவேண்டியிருக்கும். இதுவே கம்பெனியாக பதிவு செய்து கொள்ளும்போது தொழிலில் ஏற்படும் எதிர்பாராத நஷ்டங்களுக்கு சொந்த சொத்துக்களை இழக்க வேண்டிய தில்லை.

தணிக்கை!
நிதி ஆண்டு முடிந்து ஆறு மாதத்திற்குள் தொழிலில் வரவு செலவு / லாப, நஷ்ட விவரங்கள் ஒரு தணிக்கையாளர் மூலம் தணிக்கை செய்யப்படவேண்டும். இந்த தணிக்கை அறிக்கையை கம்பெனிகள் பதிவாளரிடத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இப்படி வரவு, செலவு அறிக்கையை சமர்ப்பிப்பதன் மூலம் கம்பெனியின் செயல்பாடுகள் மீது நம்பகத்தன்மை அதிகரிக்கும். தனிநபரை உரிமையாளராகக்கொண்டு செயல்படும் கம்பெனிக்கு இது கட்டாயமில்லை.

கூட்டங்கள்!
தனி உரிமையாளர்கள் நிறுவனம் என்றால் எந்தக் கூட்டத்தையும் நடத்தத் தேவையில்லை. அவரது போக்கிற்கு தொழிலை நடத்தலாம். ஆனால், கம்பெனியாக பதிவு செய்கிறபோது மூன்று மாதத்திற்கு ஒரு முறை இயக்குநர் கூட்டம் நடத்தி, கூட்ட அறிக்கையை பதிவு செய்யவேண்டும். ஆனால், வருடாந்திர பொதுக்குழு கூட்டம் நடத்த தேவையில்லை. முதன்மை இயக்குநரின் விருப்பப்படி அதிகபட்சம் 15 இயக்குநர்களை நியமித்துக்கொள்ளலாம்.

நாமினிகள்!
உரிமையாளர் நிறுவனமாக இருந்தால் நாமினிகள் அவசியமில்லை. உரிமையாளருக்கு பிறகு அவரது வாரிசோ அல்லது உரிமையாளர் விரும்பும் நபரோ அப்படியே ஏற்று தொழிலை நடத்த முடியும். ஆனால், கம்பெனியாக பதிவு செய்துகொள்ளும்போது நாமினி நியமிக்க வேண்டியது கட்டாயம். இயக்குநருக்கு பிறகு அவரால் நியமிக்கப்பட்ட நாமினி மட்டுமே தொழிலை மேற்கொண்டு நடத்த முடியும்.

இதுதவிர, கம்பெனியை மேற்கொண்டு விரிவுபடுத்த வேண்டும் என்கிறபோது பொது நிறுவனமாக மாற்றிக்கொள்ள முடியும். இதன்மூலம் பொதுமக்களிடமிருந்து பங்கு மூலதனத்தையும் திரட்டிக் கொள்வதற்கான சாத்தியங்கள் உருவாகும்.

இதில் ஒருசில பாதகமான அம்சங் களும் இருக்கவே செய்கிறது. உதாரணமாக, கம்பெனியாகச் செயல்படும்போது அதிலிருந்து கிடைக்கும் ஆதாயத்திற்கு 30 சதவிகிதம் வரி கட்டவேண்டும். கம்பெனி எவ்வளவு அதிகமாக வருமானம் ஈட்டினாலும் 30 சதவிகிதம் வரி செலுத்தவேண்டும். இதுவே, உரிமையாளர் நிறுவனமாக இருந்தால் தனிநபர் உச்ச வரம்பு அடிப்படையில் வருமான வரிச் செலுத்தினால் போதும்.

உரிமையாளராக இருந்து செயல்படுவதைக் காட்டிலும் இயக்குநராக இருந்து செயல்படுவது ஒருவகையில் பாதுகாப்பும், தொழிலை மேலும் வளர்க்கவும் கிடைத்த வாய்ப்பாகவும் இந்த சட்டத் திருத்தம் பயன்படலாம். தொழில் முனைவோர்களுக்கு நல்ல வாய்ப்பாக இந்த சட்டம் பயன்படட்டும்.

No comments:

Post a Comment